முகப்புரை

மொழிப்பெயர்ப்புக் கலையானது இந்தியாவில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட வரலாற்றைக் கொண்டது. மிகப் பழமையான மொழிபெயர்ப்பு எனப் பார்த்தால் அது சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி முதலிய மொழிகளுக்கும் இந்தியாவில் வளர்ந்த வந்த பிராந்திய மொழிகள், அராபியம், பாரசீகம் போன்ற பிற அயல்நாட்டு மொழிகளுக்கு இடையேயும் ஏற்பட்டதாகும். எட்டாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் பஞ்சதந்திரம், அஷ்டாங்கஹ்ருதய, அர்த்தசாஸ்திரம், ஹிட்டோபதேசம், யோகசூத்திரம், இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை முதலிய இந்தியக் கதைகள், காவியங்கள் மற்றும் அறிவு நூல்கள் போன்றவை அராபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. மேலும், பாரசீகம் மற்றும் இந்திய மொழிகளுக்கு இடையேயான மொழிபெயர்ப்புகளும் அதிக அளவில் பரிமாற்றம் செய்யப்பட்டன. பக்தி காலத்தில் சமஸ்கிருத நூல்கள், குறிப்பாக பகவத் கீதை மற்றும் உபநிடதங்கள் போன்றவை பிற இந்திய மொழிகளில் அறியப்பட்டதின் விளைவாக, மராத்திய கவிஞரான ஞானேஸ்வரரால் மொழிபெயர்க்கப்பட்ட கீதையின் மராத்திய தழுவலான ஞானேஸ்வரி போன்ற புகழ்பெற்ற நூல்கள் படைக்கப்பட்டன. மேலும், இராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்கள் பல்வேறு மொழிகளில் துறவிகள்-கவிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டன. சான்றாக, இராமாயணத்தைத் தழுவி இயற்றப்பட்ட பம்பா, கம்பர், மொல்லா, எழுத்தச்சன், துளசிதாசர், பிரேமானந்தர், ஏகநாதர், பலராமதாசர், மாதவ் கண்டலி (அ.து) கிருத்திபாசு போன்றவர்களின் படைப்புக்களைக் கூறலாம்.

இந்தியாவில் காலனி ஆட்சிக்காலத்தில் ஐரோப்பிய மற்றும் இந்திய மொழிகளுக்கிடையே, குறிப்பாக ஐரோப்பிய மொழிகள் மற்றும் சமஸ்கிருதத்திற்கும் இடையே அதிக அளவில் மொழிபெயர்ப்புகள் ஏற்பட்டன. ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன், ஸ்பானிஷ் போன்ற ஐரோப்பிய மொழிகளுக்கும் இந்திய மொழிகளுக்குமிடையே பரிமாற்றங்கள் நடைபெற்ற போதிலும் அப்போதைய ஆட்சியாளர்களின் மொழியாக ஆங்கிலம் விளங்கியதால், இத்தகைய மொழிபெயர்ப்புகள் அதிக அளவில் ஆங்கில மொழியில்தான் செய்யப்பட்டன. வில்லியம் ஜோன்ஸ் என்பவர் காளிதாசரின் அபிஞானசாகுந்தலம் என்ற சமஸ்கிருத நூலை மொழிபெயர்த்தது பிரிட்டிஷாரின் மொழிபெயர்ப்பின் உச்சநிலையாகக் கொள்ளலாம். இந்தியாவின் பண்பாட்டுப் பெருமையைக் காட்டும் அடையாளமாகவும் இந்தியர்களின் உணர்வில் தோய்ந்த முதன்மை நூல்களுள் ஒன்றாகவும் தற்போது சாகுந்தலம் போற்றப்பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் சாகுந்தலம் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை இது விளக்கும். பிரிட்டிஷாரின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் கீழ்த்திசைக் கருத்துக்களினால் (Orientalist ideology) தீர்மானிக்கப்பட்டதாக இருந்ததால், இந்தியாவைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் வகைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் அவசியம் ஏற்பட்டது. இந்தியாவைப் பற்றித் தங்களுக்குத் தோன்றியவிதமாக அவர்கள் கற்பனை செய்துகொண்ட நேரத்தில் பிரிட்டிஷாரின் எண்ணத்தை தகர்க்கும்/ எதிர்க்கும் விதமாக இந்திய மொழிபெயர்ப்பாளர்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் அமைந்தன. ஆனால், அவர்களின் மொழிபெயர்ப்புகள் புராதான நூல்களாகவே அமைந்திருந்தன. இராஜாராம் மோகன் ராயின் மொழிபெயர்ப்பான சங்கரரின் வேதாந்தம், கெனா, ஈஸவஷ்ய உபநிடதங்கள் முதலியவையே இந்திய அறிஞர்களால் முதன்முதலில் படைக்கப்பட்ட இந்திய நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளாகும். அதனைத் தொடர்ந்து ஆர்.சி. தத்தின் ரிக்வேதம், உபநிடதங்கள், இராமாயணம், மகாபாரதம், மற்றும் சில மரபார்ந்த பண்டைய சமஸ்கிருத நாடகங்களின் மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. இந்தியர்கள் பணிந்துபோகும் பண்பாளர்கள், கோழைகள் என்ற எண்ணத்தைக் கொண்ட கற்பனையான பயனெறியிலமைந்த கருத்துக்களை (Romantic and Utilitarian notions) எதிர்க்கும்வகையில் இம்மொழிபெயர்ப்புகள் விளங்கின. அதன்பிறகு தீனபந்து மித்ரா, அரவிந்தர், இரவீந்தரநாத் தாகூர் போன்றவர்களின் பல மொழிபெயர்ப்புகள் வேகமாக வெளிவரத் துவங்கின. இக்காலகட்டத்தில், இந்திய மொழிகளுக்கு இடையேயும் மொழிபெயர்ப்புகள் நடைபெறத் தொடங்கினாலும் அவை மிகக் குறைந்த அளவிலேயே அமைந்தன.

இந்தியாவில் தற்போதும் பெரும்பான்மையான கல்வியறிவுடையவர்களுக்குக் கூட ஆங்கிலம் எளிதில் கையாள முடியாத நிலையிலேயே இருந்துவருகிறது என்பதே உண்மை நிலவரமாகும். இப்பிரிவினர் ஆங்கிலத்தில் முழுத்திறமை பெறுவதென்பது இந்திய மொழிகளின் முக்கியமான இலக்கியங்கள் மற்றும் அறிவுசார் நூல்களின் மொழிபெயர்ப்புகளின் வாயிலாகவே சாத்தியமாகும். மொழிபெயர்ப்புப் பற்றி காந்தி அடிகளின் கருத்தை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக அமையும்: “பன்னாட்டு வியாபார வணிகத்தொடர்புக்கான ஒரு மொழியாக நான் ஆங்கிலத்தைக் கருதுகிறேன். அதனால் ஒரு சிலர் அதைக் கற்றுக்கொள்வது அவசியமாகிறது. அவர்கள் ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தேர்ச்சியடைவதோடு ஆங்கிலத்திலுள்ள தலைசிறந்தப் படைப்புக்களை இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்”. கல்வி நிலையங்களில் ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொள்வதென்பது இந்திய மொழிகளின் வளர்ச்சிக்குத் தடையாக அமையும் என்றுகூட அவர் கருதினார்.

எல்.எம். கூப் சந்தானி சுட்டிக்காட்டுவது போல் காலனி ஆட்சிக்குமுன் இந்தியாவில் பாடசாலைகள் மற்றும் மக்தாப்கள் (maktabs) மூலம் அமைந்த கல்விமுறை நடைமுறையில் இருந்தது. அவை பள்ளிக்கல்வியை ஆரம்பநிலை சமூக அமைப்பின் விரிவாகக் கொண்டு, வட்டார வழக்கிலிருந்து உயர்நடை வழக்குவரையிலான தம்முள் புரிந்துகொள்ளக்கூடிய பேச்சுவகைகளின் சங்கிலித்தொடரை வளர்க்கும்விதமாக, மொழித்திறன்களின் ஒரு படி நிலையை எற்படுத்தவும் செய்தது. பயன்பாட்டுத் தன்மையுள்ள பல்வேறு கீழ்த்திசை மொழிகள் மற்றும் எழுத்துக்கள் கற்பவரிடம் வளமான மொழிக்களஞ்சியத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் பாரம்பரியமாக இருந்து வந்த பல்வேறு முரண்கூறுகளைக் கொண்ட மொழிவேறுபாடுகளைப் (linguistic heterogeneity of India) பொறுத்துக்கொள்ள இயலாத காலனி ஆட்சியாளர்கள் ஆங்கிலத்திற்கும் இந்திய மொழிகளுக்குமிடையே ஒரு எதிர்ப்புணர்ச்சி ஏற்படும்விதமாக ஏற்றுக்கொள்ள இயலாத திட்டம் ஒன்றினைச் செயல்படுத்தினர். மெக்காலேயின் ‘Minute on Indian Education’ (1835) என்ற நூலும் அவருக்கு முன்பிருந்தவர்களின் செயல்களும் இந்திய மொழிகளைப் புறக்கணித்தன. காலனி ஆட்சிக்குப் பிற்பட்ட காலகட்டத்தில் தாய்மொழிகளை ஒரு ஊடகமாகக்கொண்டு பயிற்றுவிக்கும் நிலை வளர்ந்துவந்தது. உளவியல், சமூகவியல் அடிப்படையில் ஒரு குழந்தை தன் தாய்மொழி வாயிலாகத்தான் நன்றாக, வேகமாகக் கற்றுக்கொள்கின்றது என்ற ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் (ஐ.நா) (UNESCO) பரிந்துரை, மொழிக்கானத் திட்டங்கள் வகுப்போரால் (language planners) மேற்கோளாகக் காட்டப்படுகிறது.

எனவே, நம் சமூகத்தில் உள்ள பல்வேறு மொழிகளுக்குச் சமூகம், பள்ளிகள் இரண்டிலும் நாம் இடமளிக்கவேண்டியது அவசியமாகும். இலக்கியம் மற்றும் அறிவுசார் நூல்க ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைக்கும்போதுதான் இது சாத்தியமாகும். இந்த அறிவுசார் நூல்களை ஒரு இந்திய மொழியில் இருந்து மற்றொரு இந்திய மொழிக்கு நிமிர்வுநிலை மொழிபெயர்ப்புகள் (horizontal translation) அடிப்படையில் மொழிபெயர்ப்புகள் அமையவேண்டுமே தவிர மேற்கத்திய கடன்வழங்கும் மொழிகளிலிருந்து (donor’ languages) கிடைநிலை (vertical) மொழிபெயர்ப்புகள் என்றவகையில் இருக்கக்கூடாது (சிங் 1990).

இந்தியாவில், உயர்தரமான அறிவினைப் பெறவிரும்பும் அடிதட்டு மக்களுக்கு, இந்த அறிவுசார் நூல்களை அவர்களின் தாய்மொழி வாயிலாகக் கிடைக்கச் செய்ய இயலும் என்பது எங்களின் திடமான நம்பிக்கையாகும் என்ற இந்த முதனிலை வாசகத்தின் எண்ணப்படிதான் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (NTM) உதித்தது.